எனது நண்பனும் நாடறிந்த நல்ல கவிஞருமாகிய ச.முகுந்தன்(விரிவுரையாளர்,யாழ் பல்கலைக்கழகம்)பல வருடங்களிற்கு முன்னர் தான் எழுதிய கவிதை ஒன்றை அண்மையில் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதன் பொருள் புரியவில்லை என்று இன்னும் சில பள்ளித் தோழர்கள் புரிந்து கொள்ளும் உண்மையான அக்கறையில் கேட்டுக்கொண்டதால் இந்தக் கொரோனா விடுமுறையைக் கொஞ்சம் தமிழ்ப்பணிக்கும் ஒதுக்கலாமே என்ற ஒரு சின்ன நல்லெண்ணத்தில் என் நண்பர்களுக்காக எழுதிய பொருள் விழக்கம் இது :)
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆழமான கவிதைகள் புரிவதில்லை என்கிற மற்றும் நீலப்படம்போல தேடித் தெரிந்துகொள்ள எதுவுமில்லாத கவிதைகளை எழுதுகிற இளம் கவி ஆர்வலர்களிற்கு ஒரு வழிகாட்டியாக இது அமையலாம் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது.
மயிர்கொட்டி ஞானம் - ச.முகுந்தன்
கவிதையை உணர்ந்துகொள்ள முதலில் அது பிறந்த கால நேரத்தையும் இடத்தையும் பின்னணியையும் அறிந்துகொள்ளல் நலம். அது கவிஞர் கருதியதை நாமும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவி செய்யும்.
இந்தக் கவிதை இராணுவக் காவலரண்கள் முழத்துக்கு முழம் நிறைந்திருந்த கொடிய உள்நாட்டு யுத்தக் காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சின்ன ஊரடங்கிற்கே பல இளையவர்கள் சலித்துக்கொள்கிறார்கள் நாங்களெல்லாம் மாதக்கணக்கான ஊரடங்குகளையும், வருடக்கணக்கான பயணத்தடைகளையும் கண்டவர்கள்.
1 கிலோ மீட்டர் பாதையில் 3 தடவை வாகனத்திலிருந்து இறங்கி ஆளடையாளம் மற்றும் குண்டு இருக்கிறதா எனப்பார்க்கும் உடல் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். (கவிஞர் சொன்ன 'தடவல்' இதுதான்) அதுவும் நீங்கள் இப்போது பார்க்கும் இளகிய முகமுடைய இராணுவம் அல்ல அது. கொலைவெறி பிடித்த அல்லது மரணபயம் நிறைந்த கோர முகங்கள். அவர்களைக் காணும் ஒவ்வொரு சமயமும் உயிர்போய் உயிர் வரும்.
இந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த இளையவரான கவிஞர் – யுத்த சூழ்நிலையால் தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை ஒரு மயிர்கொட்டி(மசுக்குட்டி)உடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.(அந்த அற்பப் புழுவின் உரிமைகூட நமக்கு இல்லையே என்ற ஏக்கம் கவிதை எங்கும் விரவியிருக்கும்)
கடுமையான பத்திரிக்கைத் தணிக்கை அமுலில் உள்ள(மீறின் சுடப்படக்கூடிய சூழ்நிலையும் இருந்தது) சூழலில் தான் விரும்பும் கருத்தை புரியக்கூடியவர்களிற்கு மட்டும் புரியும்படி சொல்லவும், சம்பந்தப்பட்டவர்கள்(அதிகார வர்க்கம்) பிரச்சினைக்கு வந்தால் "அதன் அர்த்தம் இது கிடையாது சாமி" என்று இன்னொரு அர்த்தத்தைக் கோர்த்து விட்டு எஸ்கேப் ஆகவும் கவிதைதான் சிறந்த வழி.அதுதான் உலக வரலாற்றில் பல நல்ல கவிஞர்கள் யுத்த காலங்களில் தோன்றியிருக்கிறார்கள் போலும். இப்போதெல்லாம் அந்த இடத்தை கார்ட்டூன்கள் எடுத்துவிட்டன
இந்தப் பின்புலத்துடன் அவர் கவிதையைப் பார்க்கலாம்.
பச்சைகளைக் கண்டஞ்சும்
பரிதாபி ஜீவன்யான்