Wednesday, January 16, 2019

”மரணம்” எனும் மந்திர விசை !

Sketch by M.Kesharan


மரணத்தை ஓரு எதிர்மறையான விடயமாகவே பார்த்துப்பழகிவிட்டது நமக்கு. அது ஒரு அமங்கலச் சொல்லாகிப்போனது. உச்சரிக்கும்போதே ஒரு வித பயம் தெரியும் பலரது கண்களில்.  சிரமம் பாராது சில கணங்கள் சிந்தித்தால் அதுதான் வெற்றியின் செலுத்துவிசை என்பது புரியும்.

ஒரு பன்னிரண்டு வயதிலிருந்தே இறப்பின் இருப்பு ஒவ்வொரு நொடியும் அடுப்பில் ஏதோ கருகும்  நெடிபோல அடித்துக்கொண்டே இருக்கிறது ,எனக்கு.

அதனல்தான் நான்  ஹார்மோன்கள் முறு‌க்கேற்றும் பதினேழாம் வயதில்கூட எழுதிய ”மரணம்” என்ற கவிதையில்

”ஆழ்கடலுள் சுழியோடி
அண்டங்கள் கடந்து,
அமைதிக்குள் நான் அடங்க,
ஓ மரணம் !
நீவந்தெனக்கு நிம்மதியைத்தரவேண்டும் "

என்று எழுதியிருந்தேன். 

மரணம் என்பது எப்போதுமே எனக்கு ஒரு பிரச்சினையாகப்பட்டதில்லை. மரண பயம் இல்லாமைதான் தவறு செய்வோர் என்று கண்டோர் முன் பயப்படாமல் சீறி நிற்க வைக்கிறது. சாவை விடப் பெரிதாக வேறு என்னத்தைதான் அவர்களால்  வழங்கிவிட முடியும் ?. 

மறைந்த அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ் சொன்னதுபோல ”மரணத்தின் முன்னர் எந்த அவமானங்களும் தோல்விகளும்   ஒரு பொருட்டல்ல....” 

வாழ்வில் வென்றவனுக்கும் இறுதியில் மரணம்தான் தோற்றவனுக்கும் மரணம்தான் . கோடி ஆசைகளை வைத்துக்கொண்டு  இடையில் தோற்றால் என்னாகிடுமோ என்று  முயற்சியே எடுக்காமல் மரணத்தை நுகருபவன் எவ்வளது கையாலாகாத அப்பாவியாக இருக்க வேண்டும். ? 

Thursday, November 29, 2018

வடக்குத் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பு விண்ணப்பம். (வி.இல 001)

ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்.




Please see the update at the end of this article .

டிசம்பர் 12 உடன் நாட்டில் ஓஎல்(G.C.E O/L) பரீட்சைகள் முடிவிற்கு வந்து விடும். கொழும்பில் உள்ள காமினியும் மொஹமட் நளீமும் அடுத்து வரும் 3 மாதங்களையும் எப்படியெல்லாம் சந்தோசமாகக் கழிக்கலாம் என்று திட்டமிடுவார்கள். திருகோணமலையிலிருந்து ஓ.எல் எழுதியதும் சிவகுமார் தான் நெடு நாளாக ஆசைப்பட்ட மட்டக்களப்பு பாசிக்குடாக் கடற்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விடுவான். தை மாதத்தில் மலேசியாவுக்கும் தந்தையுடன் செல்ல இருக்கிறான். அம்பாந்தோட்ட திசாநாயக்கா அடுத்த மூன்று மாதங்களுக்குள் தனக்குப்பிடித்த இந்திப்படங்களை எல்லாம் பார்த்து விடுவது என்று கிளம்பி விடுவான். அவனவன் இத்தனை வருடமும் கல்விக்காகச் செய்த தியாகங்களை ஒதுக்கி வைத்து விட்டு தனது இந்த இளம் வயதில் மட்டுமே உணர்ந்தனுபவிக்கவேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றைத் தேடிப்புறப்பட்டு விடுவான்.

ஆனால்...யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில், தம்பி சிவகுமார் ,   யாழ்ப்பேப்பர்கள் எல்லாம் " உடனே வந்து சேருங்கள் -சிலபஸ் மிஸ் ஆகிவிடும்" என்று வெருட்டியதால் ,  ஓ.எல் முடிந்த அடுத்த கிழமையே திருகோணமலையிலிருக்கும் அம்மம்மா வீட்டிற்குப்போய் ஒரு கிழமை நிற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தியாகம் செய்து விட்டு , தனது ஓ.எல் பரீட்சைக்கு என்ன பெறுபேறு வரும் என்றே தெரியாமல் ,ஏன் இந்தப்பாடத்தை தெரிவு செய்கிறோம் என்பதைக்கூட அறியாமல் பயோ சயன்ஸ் ரியூசனுக்குப்போகத்தொடங்கிவிடுவான்.

வெளி உலக அறிவு இல்லாத - இன்னொரு மருத்துவ பீட மாணவன் தயார்.

"பாசிக்குடா ஈரானுக்குப்பக்கத்திலா இருக்கிறது ?" - "என்னது,தாடி வைத்த  சாமிகள் எல்லாம் பாக்கிஸ்தான்  பயங்கரவாதிகளா ? " "காலிச் சிங்களவர்கள் நம்மைக் கண்டால் வெட்டிப்போட்டு விடுவார்களாமே   ?"  என்று கேட்கும் பாடத்திட்டத்துக்கு வெளியே ஏதும் அறியாப் புத்தகப்பூச்சி ஒன்று தயாராகிவிடும். 

”முஸ்லிம்கள் எல்லாம் கட்டாயம் நாலு கல்யாணம் கட்ட வேண்டுமாமே என்று என்னிடம் கேட்ட ஒரு  நண்பனையும்  , மச்சான் ”ரொயிலட் ரிசூ(Toilet tissue)” என்றால் என்ன என்று போன் பண்ணிக்கேட்ட மருத்துவ நண்பனையும் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது. அதுவும் மிக அண்மையில் . (அம்மா சத்தியமாக இந்த சம்பவங்கள் இரண்டும் உண்மை ) எனது நண்பர்கள்(மட்டும்) என்னைத் தொடர்பு கொண்டால் அந்த இரண்டு புண்ணியவான்களும் யாரென்று சொல்கிறேன். ) -ரியூசன் பரிதாபங்கள்

"கல்வியின் நோக்கம் வெறும் பாடமாக்கும் இயந்திரங்களை உருவாக்குவதல்ல. புதியன புனைதல் - கண்டுபிடிப்பு - உள்ளவற்றை மேம்படுத்தல் என்ற சில திறன்களாவது உள்ள நற்பிரஜைகளை நல்ல சமூகச் சிந்தனையோடு உருவாக்குவதே," என்பதே எனது கருத்து.

தனிமனித மேம்பாடு , அதிலிருந்து பிறந்த சமூக மேம்பாடு என்பவற்றை நோக்கி அமைய வேண்டிய கல்வியை வெறும் பணம் பண்ணும் யுத்தியாக மட்டும் பார்க்கும் நிலையில் இன்று நாம். அதிலும் அரசாங்க வேலை தரக்கூடிய வகையில்  எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதையெல்லாம் படிப்போம்-(பாடமாக்குவோம்). இந்த மனப்பாங்கினால் சுய புத்தியும் ஆளுமையும் வளரப்பெறாத ஒரு குறை வளர்ச்சித்தாவரங்களாகவே எங்கள் இளம் சமுதாயம் தொடர்ந்தும் மங்கி வருகிறது.

Wednesday, November 14, 2018

அம்புலிமாமா மற்றும் பரமார்த்த குருவும் சீடர்களும் கதைகள் PDF free download - V.1.1

அம்புலிமாமா எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை என் சமவயதில் பயணிப்பவர்களால் பெரும்பாலும் மறந்திருக்க முடியாது.” வட்ஸ் அப்பும்”, ” வைபரும்”, ” பேஸ் புக்கும் ” வந்து இன்றைய இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்க முன்னர் இருந்த வாசிப்பால் வளம் பெற்ற பொற்காலத்தின் இளைவர்கள் நாங்கள்.



இல்லாது போய்விட்ட அம்புலிமாமா கதைகளை பல இணையத்தளங்களிலிருந்து பிரதிசெய்து - எனது பிள்ளைகளிற்காகவும் எனது நண்பர்களின் பிள்ளைகளிற்காகவும் ஒரு  மின்னியற் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

Monday, May 7, 2018

இடம்பெயர்ந்த டீ.என்.ஏ - யாழ்ப்பாணம் பிறழ்ந்த வரலாறு -01



நல்ல டீ.என்.ஏ க்களின்  இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும்  இன்னும் பெருமைமிகு மேதாவித்தனமும் - அடிப்படை மனிதப் பண்புகளுமுள்ள யாழ்ப்பாணத்தவரைக் காண முடிகிறது.

ஆனால் அனைத்து உயர் கலைகளும் கல்வியும் விளைந்து பெருகிய  கலைமாண்புகளின் சொந்த நிலமாகிய யாழ்ப்பாணத்தில் இன்று எந்த பெறுமதியும் அறியாதவர்களையே சுற்றிச் சுற்றிக் காண முடிகிறது.

இன்று காலை,  கனடா வாழ் கலைஞர்களின் ஒரு சில இசை அல்பங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு மென்மை ? என்ன ஒரு உயர் கலை வண்ணம்  ? - என்ன ஒரு இசை - ஒளி அமைப்பு ? . அவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வழித்தோன்றல்கள் ஆனால் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். நல்ல தமிழில் பண்ணபான உயர் கலைப் படைப்புக்களை வெளியிட்டிருந்தார்கள்.

கொலையன்,வெறியன், திமிர் பிடித்தவன் என்று இன்றைய யாழ்ப்பாணம் வாழ் மக்களின் தரத்தை வெளிப்படுத்தும் - தாடி மீசை அதிகம் வைத்த  - படிப்பறிவை வெளிப்படுத்தாத ‌ரௌடிக் கதாநாயகர்களின் குப்பைக் கதைகளைக் கொண்ட - அல்லது மிக விலை உயர்ந்த கமெராக்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி - சுவையே இல்லாத - ஆயிரம் தடவை இந்திய சினிமாக்களில் கண்டு சலித்துப்போன கதைகளைக்கொண்ட குறும் திரைப்படங்களைக் கண்டு வெறுத்துப்போன எனக்கு - இந்த வீடியோக்கள் ஈழத்தவர் சினிமா பற்றிப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

கல்வி-நன்னெறி-மனிதாபிமானம் என்பவை சான்றிதழ் அளவில் மட்டுமே வளர்ந்திருக்கிறது- 1995 இற்கு பின்னர் (மா‌பெரும் இடப்பெயர்வின் பின்)உருவான இன்றைய யாழ்ப்பாணத்தில்.

Tuesday, April 24, 2018

ஞான விளக்கு - என் பிறந்தநாட் பாடல்




கைப்பேசி
கணினி வலை
குறுஞ்செய்தி
என்றொவ்வோர் ஊடகத்தின்
உட்புகுந்தும்
என்
வழித்தடங்கள்
தேடி

உங்கள் தோட்டத்தில்
நோகாது
கொய்து நெய்த
பூங்கொத்தால் என்மேல்
வாழ்த்துமழை
வற்றாமல் தூவும்
குளிர்
மேகத்தோழர்களே..

கவனியுங்கள்..

ங் ஙா..என்ற
மெல்லியல் அகரமோ ,உகரமோ
வகை தெரியாது வாய்மலர
அம்மா முகத்தில்
நிலா பார்த்துச் சிரித்த
அந்தச் சின்ன வயதல்ல
இப்போது
எனக்கு

முப்பதுகளின் மேல்
புதிதாய்ப்பிறக்கும்
ஓவ்வொரு ஆண்டுமே
உயிர்ப்படகில் விழும்
ஒவ்வொரு புதிய
ஓட்டைகள்தானே.

உணரின்..

மூழ்கும் திகதி
முற்கூட்டி அறியாத
பாவி மனிதப்பிறப்பு இது.

காலம் வரைந்த
இந்த ஓவியத்தின்
வர்ணங்களில்தான்
எத்தனை வளர் சிதை மாற்றங்கள்.
பளிச்சிட்ட பல இப்போது
கண்களுக்கே தெரிவதில்லை.

நிலையாமை எனும்
உண்மையின் கரங்கள்
நெஞ்சில் அறையும்
ஒவ்வொரு
நொடியும் .
;
நினைப்புகளை வழி
மறித்து
சித்தனாகச் சில கவிதைக்
கோடுகிழித்தாலும்
பஞ்சு முகில்கள் எனப்
பாரம் இல்லாமல் பறந்து
ஒரு
மோன மொழி தெரிந்த
புத்தனாகும் வழி
இன்னும் புரியாமல்
நிற்க்கும்-என்
பித்த மனசு.

Friday, March 9, 2018

கண்டியில் பற்றிய தீ - Burning Kandy - Crisis in the small island !

Kandy problems in Tamil ,Sri Lanka ,Kandy crisis Tamil article


”அப்பா இண்டைக்கு முஸ்லிம் ஆக்கள் எல்லாருக்கும் அடி விழுதாம்....”
”ஏனாம் ?”
”அவை சாப்பாட்டுக்க நஞ்சு போட்டவயாம் அதுதான்....”

எனது 8 வயது மகள் பாடசாலையிலிருந்து வந்ததும் என்னுடன் மேற்கொண்ட உரையாடல் இது.

பிஞ்சு மனங்களில்கூட நஞ்சு விதைக்கப்பட்டாயிற்று. மனங்கள் வளராத  மனிதர்களின் தேசம்  இது.

  ஓரு இனம் பற்றிய மோசமான மனப்பதிவுகள் இன்னொரு இனத்திடம் இப்படித்தான்  அடிப்படையே இல்லாத சொல்லாடல்களால் பரவி வளர்கிறது  .


வரலாறு ஒரு வட்டம்தான் - தமிழர்களாய்ப்பிறந்து இவ்வளவு வேதனைகளையும் அனுபவித்தாயிற்று . இப்போது முஸ்லிம்களின் முறைபோலும்.  


இன-மத-பிரதேச-இன்ன பிற வாதங்கள் என்பன மனிதனுடன் பிறந்தது. எத்தனையோ கெட்ட பழக்கங்களை அடையாளம் கண்டு நம்மிலிருந்து விலக்கிக்கொள்வது போல - அறிவு விருத்திக்கேற்ப மனிதர்கள் இந்த வாதங்களையும் துாக்கிப்போட்டு வாழப்பழகுவர். 

நான் சொல்லும் அறிவு - மெய்யறிவு.

அறிவு என்பது  பள்ளிப் படிப்போ பட்டப்படிப்போ
 அல்ல ”நெஞ்சத்து: நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்: ” என்று நாலடியார் சொன்ன அறிவு.ஒரு பக்கம்  சாயாது நடுவு நிலையாகச் சிந்திக்கத் தெரிந்த கல்வி அறிவு. 

அறிவு நிலை விருத்தி குறைந்தவர்கள்தானே எந்த சமூகத்திலும் பெரும்பான்மை. 

குறை அறிவுள்ள - வெறி முத்திய முட்டாள்கள் சிலர் - ஒரு அப்பாவியைத் தாக்கி கொன்றுவிட - அந்த முட்டாள்களின் செயலை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி அந்த சமூகத்தைக் கருவறுக்க வேண்டும் என்று மிக நீண்டகாலமாகக் காத்திருந்த இனவாத சக்திகள் தம் ஆட்டத்தைத் தொடங்கி விட்டன.

பாவிகளின் கூத்தில் எப்போதும் பலியாவது அப்பாவிகளே !.

இதுவரை 5 இற்கு மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

முதலாம் நாள் மாலையில் கலவர ஆரம்பத்தின் பின் ஊரடங்கு போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ,உட‌னேயே எங்களுக்கு விளங்கிவிட்டது. 

ஊரடங்கு ? ........ பொலீஸ் பாதுகாப்பில் 1983 இல் எங்களுக்கு என்ன நடந்தது என்பது   நமக்குத்  தெரியும்தானே ,எனவே ஊரடங்கு உண்மையில் ஒரு இனத்துக்கு மட்டுமே  என்பதும்  - அவர்களை வெளிக்கிட விடாது ”வச்சு செய்வதற்கான” ஏற்பாடே அது என்பதும் பல நுாறு கிலோமீற்றர் தாண்டி யாழப்பாணத்திலிருந்தாலும் - எங்களுக்குப் புரியக்கூடியதாக இருந்தது.

நினைத்த படியே ஒரு இரவில் 160க் மேற்பட்ட கடைகள் - 25 ற்கு மேற்பட்ட பள்ளி வாயல்கள் சிதைக்கப்பட்டன. 6ம் திகதி காலையில் ஒரு முஸ்லிம் இளைுஞனுடைய உயிர் பறிக்கபட்டது தெரியவந்தது. அந்த விசேட தேவையுடைய இளைஞன் எரிந்த கட்டடத்துள் சிக்கி மரணம் அடைந்திருந்தான். 

நாட்டின் தலைவர் - வழமைபோலவே ”அமைதி காக்க வேண்டினார்” கோடிகளை வெற்றிகரமாகச் சேர்த்து செட்டில் ஆகிவிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்  அறிக்கைகளை விட்டு வெறும்வாய் மென்று கொண்டிருந்தார்கள். 

ஐயகோ நேரம் செல்லச் செல்ல..இன்னும் பல உயிர்கள் காவு கொள்ளப்படப்போகின்றனவே ஏதாவது செய்யுங்கள் என்று - இங்கிருந்து இரத்த சம்பந்தமில்லாத   மனம் பதறியது. அரசியல் தலைவர்கள்     கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

7 ஆம் 8 ஆம் திகதிகளில் - அந்த வலிவுள்ள  விடுதலைப்போராளிகள் இயக்கத்தையே அழித்த பலமிக்க - தற்போது வேலை வெட்டி இல்லாதிருக்கும் இராணுவம் சென்றும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது,   மேலும்   முஸ்லிம்களின்  நுாற்றுக்கணக்கான கடைகள் ‌கட்டடங்கள் எரித்து அழிக்கப்பட்டன. 

Monday, November 13, 2017

நினைத்ததை நினைத்தவாறே அடைவதெப்படி ? (Secret Law of Attraction #1) Video - Updated


யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01

Law of Attraction in Tamil


இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கும் மனித மன சக்திகள் பற்றிய சுவாரசியமான  கலைச்சொல்தான் ”லோ ஒப் அற்றாக்சன்” . ஈர்ப்பு விசையின் விதி -என்று மொழிமாற்றம் செய்து புரிந்து கொள்ளலாம். கலைச்சொற்களை மொழிபெயர்த்துத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்சிக்கு எதிர்க்கட்சி நான். 

மனதில் ஆழமாக நம்பி-நான் இதை அடைய வேண்டும்-நிச்சயம் அடைவேன், என்று உறுதியாக நம்பி- வேண்டும்  பொருளை அல்லது சுகங்களை -வாய்ப்புக்களை நாம் அடையலாம் என்பதுதான்   இந்தத் தத்துவத்தின் சாராம்சம். 

இந்த விதிபற்றிய தமது அனுபவங்களை மக்கள் பலர் உரைக்கும் காட்சிகளடங்கிய ”சீக்கிறட்” என்ற வீடியோ யூரியூபில் சக்கைப்போடு போடுகிறது. (அதனது தமிழ் வடிவத்தை இங்கே காணலாம். Video Link  )

இப்படியான விடையங்களை விவாதிக்கும் அந்த அரிதான நண்பர்களில் இருவர் இதைப்பற்றி என்னுடன் தம் அனுபவங்களையும் பகிர்ந்தமையும் எனது அனுபவங்களை பகிர வைத்தமையுமான சம்பவங்கள் மனக்குளத்தில் கற்களை விட்டு எறிந்ததில் -அலைகண்ட கடாலாகிப்பரபரக்கிறது சிந்தனைகள்.

Tuesday, November 7, 2017

விதி எனும் எல்லை- உங்கள் எல்லை எது ?

உங்களுக்கு என்று ஒரு வட்டம் கீறப்பட்டிருக்கிறது. எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லை எது என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்சக்காலம் தேவைப்படும். அந்தக்காலம் உங்கள் புத்தி ஆன்ம பக்குவம் என்பதைப்பொறுத்து வேறுபடும் .

முயற்சி செய்யாமல் எங்கள் எல்லை தெரியாது. ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவரின் முன்னரும் ஒவ்வொரு துார எல்லைகளில் கண்ணுக்குத்தெரியாத கயிறு கட்டப்பட்டிருக்கிறது. ஓடிப்போய் முட்டி நிற்கும் போது மட்டுமே அவரவர்க்கு அவரவர் எல்லை புலப்படும். நாம் விடுவதில்லை மீண்டும் தடைப்பட்ட  இடத்திலிருந்து வேறு திசை நோக்கி ஓடுவோம். மீண்டும் குறித்த துாரத்தில் கயிறு தடைப்படுத்தும். மூச்சு முட்டி களைக்கும் மட்டும் ஓடுவோர் சிலர். உயிர் போகுமட்டும் எல்லை உடைக்கலாம் என்று ஓடுவோர்தான் பலர்.

குறைந்தது பத்துவருட முயற்சியிலாவது எமது எல்லை எவ்வளவு என்று கண்டு கொள்பவர்கள் அதி புத்திசாலிகள்.

Saturday, September 9, 2017

வைக்கோல் பட்டடை யுத்தம்

நான் ஒன்றும்  மாடல்லத்தான்..
என்றாலும்,
தினசரி
போராட வேண்டியிருப்பது என்னவோ
வைக்கோல் பட்டடை நாய்களுடன்தான்.

நொடியின் பெறுமதி
துளியும் வீணாக்காது வாழ்பவன்
இன்று,
வருடத்தைக்கூட
வருத்தப்படாது ‌தொலைக்கும்
மனிதப்பூச்சிகள்
மத்தியில்  ,
இன்னும் மோசமாய்

பயன்படுத்தாத நாட்கள்
எல்லாம்
செல்லாத (500) ரூபாய் நோட்டாக
வயதெனும் பீரோவில்
இறுக வைத்துப்  பூட்டப்படுகிறது.

ஆண்டில் அரைவாசிக்கு மேல்
அதி
கசப்பு நாட்களையே
என்
காலண்டர்
எப்போதும் காட்டுகிறது.
”அதி” போனால்
மீதிகூட
கசப்பு நாட்கள்தான்
உலக சமுத்திரங்களின் மொத்த
உப்பையும்
என் வாழ்வில்
யாரோ வாரிப்போட்டதுபோல்..  


Tuesday, May 23, 2017

சூனியக்கிழவிக்கு ஒரு மடல் !


நெடுந்துார ஊர் ஆச்சி !

வியத்துப்போய்
நீங்க எழுதிய
வெறுங் கடதாசி   கிடைச்சுது

வள காப்பு வித்து
வயல்காட்டில்  களைச்சுழைச்ச
கைக்காசப் போட்டுத்தான்
கடுதாசி போட்டீக

எனை மாத்த
ராப்பகலா
ஏதேதோ செஞ்சீக

அடியாளு வச்சீக
அரைமணிக்கு ஒரு தடவை
வேட்டைக்கு போ‌றேனா
வெறும்வாய மெல்லுறேனான்னு
வேவுகளும் பாத்தீக

சந்திர முகிப்பேய் தொடங்கி
சவுக்கார்ப்பேட்டை பேய்வரைக்கும்
ஏவி எ‌னைக்குழப்ப
ஏவல் வினை செஞ்சீக

மணிக்கொருக்கா கடுதாசி
வலைமனைக்குள்
மறைஞ்சிருந்து
மட மடன்னு வரைஞ்சீக

யார் வாழ்வில் விளக்கேத்த என்வாழ்வை எரிச்சீக
அடுப்பெரிக்க கொள்ளிக்கு
ஆள்விறகாப் போட்டீக

தர்மத்தைப் புரியாமல்
தார்மீகம் சொன்னீக
மநுநீதி காணாமல் உங்க மன
நீதி கண்டீக

மன்னனுக்கும் குடிகளுக்கும்
மாறுகிற நீதி உண்டு

பொன்னனுக்கும் சுப்பனுக்கும்
பொருந்துவன எல்லாம்
போதிமரப்புத்தனுக்குப் பொருந்திடுமா
சொல்லீக ?

மனக்கணக்கால்
மறுபடியும்   ஒரு வாழ்வை
மண்ணாக்கி போட்டீக

Monday, January 16, 2017

What a coincidence ? - அச்சமின்றி படத்தின் சூப்பர் சீன்ஸ் - பி.எ.பெ.வா பாகம் 3

பி.எ.பெ.வா பாகம் 3

வாழ்வில் எதிர்பார்க்காமல் சில சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று சிங்காகிப்போவது (Sync -பொருந்துவது) அல்லது எதிர்பாராமல் நடைபெறுவது ஆங்கிலத்தில்  Coincidence  எனப்படும்.



இணையத்தில் யாரோ பகிர்ந்த இந்த வீடியோக்காட்சிகள் எனது முன்னைய இரண்டு பதிவுகளுடனும் என்னமாய்ப்பொருந்திப்போகிறது  ! ?

Watch the video : What a coincidence ! :)  கீழே வழங்கப்பட்டுள்ள வீடியோவைப்பாருங்கள்.

நம்ம டிசைனில்தான் பிழையா ? -பி.எ.பெ.வா பாகம் 2

அண்மைய எனது முகப்புத்தகப்பதிவும் - நண்பர்கள் பதில்களும்.



எனக்கு மட்டும் ஏன் இது எல்லாம் கண்ணில் பட்டுத் தொலையுது ?


ஒரு பாடசாலையில் எனது மகனது அனுமதிக்காக சென்றிருந்தேன் . பாடசாலை சொக்ஸ் வாங்கி வரும்படி மனைவி சொன்னதால் சொக்ஸ் வேண்டும் என்றேன் . ஒரு சோடி எவ்வளவு ? என்றேன் . 180 ரூபாய்கள் என்றார்கள். இரண்டு சோடி தரும்படி சொன்னேன். ஆயிரம் ரூபாய்தாளைக்கொடுத்ததும் அவர்கள் 860 என்று வாய்க்குள் முனகியபடியே மிகுதி 140 ஐயும் இரண்டு சோடி சொக்சுடன் 125 ஆண்டு நிறைவு மலர்(புத்தகம்) ஒன்றையும் நீட்டினார்கள். இது எதற்கு நான் கேட்கவில்லையே என்றேன். நல்ல உபயோகமான புத்தகம் என்று சிரித்தபடியே திணித்தார்கள். நான் ரசீது கேட்டேன். அதற்கு ரசீது தரமுடியாது என்றார்கள். ( அந்த முட்டாள்களுடன்

மீண்டும் சண்டை பிடிக்க விரும்பாமையால் [அண்மையில்தான் ஒரு பெரும் சமர் ஆரம்பித்திருந்தேன்] - எதெற்கெடுத்தாலும் இவன் மட்டும் நியாயம் கேட்டு சண்டை பிடிக்கிறான் மற்ற 240 பெற்றோரும் மூடிக்கொண்டுதானே போகிறார்கள் என்று  ,இதைப்பார்த்துக்கொண்டிருக்கும்  அந்த மூடிய பெற்றோர்கள் உட்பட எல்லோரும் கட்டாயம் சொல்வார்கள் என்பதால்.சண்டை பிடிக்காது ..) அடுத்த கவுண்டர்களில் கேட்ட ரசீது வழங்கிய கட்டணங்கள‌ை கட்டி விட்டு வந்தேன்.

Saturday, January 7, 2017

பிச்சை எடுத்துப் பெருவாழ்வு - மீண்டெழும் நிதி கேட்கும் பாடசாலை .


”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம்.

நேற்றைய தினம் (07/01/2017)பிரபல தேசியக் கல்லுாரி ஒன்றினது ஆறாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களைச்‌சேர்த்துக்கொள்ளல் சம்பந்தமான ஒன்றுகூடல் அதிபரினால் நடாத்தப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து 160 எனப்படும் குறித்த பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியைத் தாண்டி புள்ளி பெற்று கல்வியமைச்சினால் நேரடியாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.


கலந்துரையாடலே காசு வாங்குவதற்குத்தான். அரசு எத்தனை சட்டங்களைப்போட்டாலும் பெயரை மாத்தி மாத்தி லஞ்சம் வாங்குவதில் அரச பதவியில் ‌உள்ள பெரும்பான்மையோர் நிபுணர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பில் (அதாவது அதிபர் நேரடியாக வாய் திறக்காது) ஒருத்தர் காசு கேட்டுப் பேசினார். பாடசாலை செலவினமாக வருடாந்தம் ஒரு கோடிக்கு மேல் ஆவதாகவும் ,  (கல்வி அமைச்சில்  இருக்கும்  நேர்மையான முதுகெலும்புள்ள   ஒரு அதிகாரியாவது இதைப்பார்க்க மாட்டார்களா என்று ஏங்கி எழுதுகிறேன்.)அச்செலவினத்தில் 50 இலட்சம் மட்டுமே கல்வி அமைச்சினால் வழங்கப்படுவதாகவும்  மிகுதிச் செலவு ஆறாம் வகுப்பு அனுமதியிலிருந்தே பெறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Thursday, November 17, 2016

என்னைக் கொன்ற கல்வித்திட்டம்.



என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி ஒன்று நிறைய அப்பாவின் ரேப் ரெக்கோடரிலிருந்து களவாய்க்கழட்டிய சிறிய மோட்டார் முதல் கொண்டு ,மின் குமிழ்கள் , வயர்கள் ,பற்றிகள் ஆணிகள் என்று பல்வேறு இலத்திரனியல் ,பொறியியல் சார்ந்த பொருட்களைச் சேர்த்து வைத்திருந்ததாலும் ஏரியாப்பசங்களால் ”விஞ்ஞானி” என்று சிறிது காலம் அழைக்கபட்டிருந்தேன். நல்லகாலமாக அந்தப்பட்டம் நிலைக்கவில்லை.

படிப்பு எனக்கு வேப்பங்காயாக கசத்தது ,நல்லுார் ஒஸ்லோ ரியூசன் சென்ரறில்  படித்த   எல்லாக் குழப்படிக்காறர்களும் எனது நண்பர்களாக இருந்தார்கள். கண்ட கண்ட சாத்திரிமாரிடமெல்லாம் என் சாதகத்தைக் காட்டிப் ”பெடிக்கு எப்ப புத்தி வரும் ? ”என்று வீட்டில் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.

பரீட்சை நெருங்கிய போதுதான் படிப்பின் சுமையை கொஞ்சம் பொறுப்போடு ஏற்றுக்கொண்டேன். உயர்தரம் போவது என்னவோ கம்பஸ் போவது போல் சக நண்பர்களால் பார்க்கப்பட்டது. எனவே விஞ்ஞானப்பிரிவை உயர்தரத்தில் எடுத்தால் பல ஆய்வுகளைச் செய்யலாம் என்றும் , சுயமாக கண்டு பிடிப்புக்கள் போன்றவற்றை நிகழ்த்தவும் வாய்ப்புண்டு என்றும்..என் ஆய்வுப் பசிக்கு  உயர்தர விஞ்ஞானம் இன்னும் தீனிபோடும் என்றும் நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒருவாறாக ஓ.எல் என்ற தடையை தாண்டி உயர்தரம் புகுந்தாயிற்று. நுாலகத்தில் புகுந்து உள்ளதிலேயே பெரிய இரசாயனவியல் ஆங்கிலப் புத்தகத்தை கைப்பற்றினேன். சைக்கிள் கரியரில் அதை  வைத்து வீடு நோக்கி மிதிக்கையில் அடுத்த தொமஸ் அல்லா எடிசன் நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணிக் கொண்டேன்.

பொதுவாக உயர்தரம் வந்த புதிதில் ஆர்வக்கோளாறிலும் நான் ”டாக்கடராயிடுவேன்” போன்ற பல உன்னத செய்திகளைச் சமூகத்திற்கு சொல்லும் விருப்போடும் பல மாணவர்கள் பெரிய  புத்தகங்களைச் சைக்கிள் கரியரில் மற்றவர் பார்வையில்  படவேண்டும் என்ற நோக்கில் சுமப்பர்(அப்படியான பல நண்பர்கள்  எனக்கிருந்தனர்). ஆனால் நான் அப்போது அந்த வகையில் இருக்கவில்லை.

ரியூசன் என்ற ஒன்றிற்கு போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயக் கலாச்சாரம்(சமூக அவலம்) காரணமாக நானும் மிகப் பிரபல ஆசிரியர்களின் கொட்டில்களிற்கு(ஆம் கோடிக்கணக்கில் உழைக்கும் இந்த இடங்கள் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களாகவும் மாணவர்க்கு ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க போதிய மலசலகூட வசதிகள் கூட இல்லாமலும் இருக்கும்)செல்ல வேண்டி வந்தது.

Monday, November 7, 2016

நாய்ஸ் பொலுாசன் -வடக்கும் சத்த மாசும் !

நாய்ஸ் பொலுாசன் !(நாய்கள் பாவம் ! அவற்றுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.-Noise Pollution )


காது கிழிய சத்தம் போட்டு விழாக்கொண்டாடும் காட்டுக் கலாச்சாரத்தை இவ்வளவு நாகரிகம் அடைந்த பிறகும் நாம் விடுவதாயில்லை . மத்திய சுற்றாடல் அதிகார சபையால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திண்மக் கழிவு வகைப்படுத்தி அகற்றும் நிகழ்வில் (கிட்டு அல்லது சங்கிலியன் பூங்காவில்) குழாய் ஸ்பீக்கர்களையும் கட்டி அலற விட்டபடி இருந்தார்கள். நான் சென்றபோது அந்த  உயர் பதவியிலிருந்த  பெண்மணி உட்பட்ட மற்றவர்கள் சிலர் தங்களுக்குள்ளேயே கலந்துர‌ை‌யாட முடியாது..கத்திக் கத்திப்‌பேசிக்கொண்டிருந்தார்கள். நான்  சொன்னேன்   ” முதலில் சத்தத்தை குறையுங்கள் அப்புறம் உங்களுடன் நான் பேச வேண்டி இருக்கிறது" ." Why why what's wrong?" என்றார்கள். .  சுற்றாடல் அதிகார சபையே குழாய் ஸ்பீக்கர் பயன்படுத்தும் பொறுப்பற்ற செயலைக்குறிப்பிட்டேன் , உடனே சத்தம் நிறுத்தப்பட்டது. பல அரச அலுவலகங்கள் பிறர் குறிப்பிட்டும்  சத்தம் ‌ போடுவதை நிறுத்துவதில்லை. அந்த வகையில் சுற்றாடல் அதிகார சபை பாராட்டப்படத்தக்கது. :) 
சத்த மாசைக் கட்டுப்படுத்த வேண்டிய சுற்றாடல் அதிகார சபையே சத்தத்தை  -சட்டத்தை மீறிப் போட்டது - இலங்கை போன்ற நாடுகளின் பலவீனமான அரச நிறுவனங்களின் செயற்றிறனிற்கும் - நெறிமுறைகளை கடைபிடித்தலில் காணப்படும் குறைபாடுகளிற்கும் தகுதியற்றவர்கள் மற்றும் திறமையற்றவர்கள்  அரச துறையின் உயர் பதவிக்கு வருவதால் ஏற்படும் துயரங்களிற்கும் உதாரணம்.

60  டெசிபல் என்ற அளவுக்கு மேற்பட்ட சத்தம் தொடர்ந்து கேட்கப்படுவதனுாடாக செவிட்டுத்தன்மை முதல் மன ரீதியான பாதிப்புக்கள் வரை  மிகப்பாரதுாரமான பாதிப்புக்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிடும்.

பக்கத்து வீட்டுக்காரர் குப்பையை  பற்றவைக்கும் போது புகை கண்ணை எரிப்பதாலும் நாற்றம் வருவதாலும் அவர்களுடன் சண்டைக்குச் செல்லும் நாம் , சத்தத்தின் அபாயத்தை அறியாமலே சகித்துக்கொள்ளப்பழகி விட்டோம். 



பெரும்பாலும் வடக்கு மாகாணத்திலே அதுவும் யாழ் பிரதேசத்திலேயே சத்த மாசு மிக அதிகமாக உள்ளதாக நான் அனுபவ ரீதியாக உணர்கிறேன். 70 முதல் 85 வரையான     டெசிபல் அளவில் ஒலிக்கும் சத்தத்தை ஆகக்கூடியது 8 மணி நேரம் ‌தான் சாதாரண காதுகளால் கேட்டுத்தாக்குப்பிடிக்க முடியும். சாதாரணமாக ஒரு நகரப்போக்குவரத்தில் வாகனங்களின் இரைச்சல் 85 டெசிபல் வரை (சராசரியாக ) இருக்கும். 

அலாரம் அடிக்கும் கடிகாரச்சத்தம் 80 டெசிபல் சத்தத்தை உருவாக்கக் கூடியது. மேலும் வெவ்‌வேறு கருவிகள் ஏற்படுத்தும் சத்தத்தின் அளவு எவ்வளவு என இங்கே பல படங்களில் காட்டப்பட்டுள்ளது.


Monday, October 3, 2016

மதன் எனும் மனிதன் - போதிமர நண்பர்கள் 01

ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவிற்கு நுழைந்த மாணவர்களை மட்டும் கொண்டதாக இருந்தது ஆறாம் வகுப்பு - ஈ பிரிவு. அங்கேதான் நாம் சந்தித்துக்கொண்டோம்.




சற்று மிதந்த பற்களுடன் கண்களில்  ஒளியுடன்  மென்மையாகப் பேசக்கூடியவன் மதன்.  நான் கச்சேரி நல்லுார் வீதியில் எனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு சிறிய மீன்தொட்டியையும் அதில் கொஞ்சம் மீன்களையும் வைத்திருந்தேன்.

மதனுக்கு அந்த மீன்களில் ஆர்வம். அடிக்கடி அவற்றை வந்து பார்வையிடுவான். மதனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பித்து சில வாரங்கள்தான் இருக்கும். ”நீர்”  என்று யாழ்ப்பாணத்துக்கே  உரிய மரியாதைப்பன்மையில் பேசிக்கொள்ளுமளவுக்கு மட்டும்தான் நாம் நெருங்கியிருந்தோம் .

திடீரென்று ஒருநாள் வீட்டு வாசலில் வந்து மணியடித்தான் மதன் .  கையில்  ஒரு நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பை . அதனுள் ஒரு சோடி அழகிய ஏஞ்சல் மீன்கள். ஏஞ்சல் மீன்கள் என் மனதை மயக்கும் ரம்மியம் மிக்கவை ஆனால் வாங்கக் காசில்லாமல் அம்மா வட்டக்கச்சியிலிருந்து லீவுக்கு வரும்போது கேட்போம் என்று இருந்தேன். 

இவன் கையில் மீன்களுடன் நிற்கிறான். எனக்குப் புரியவில்லை. கதவைத்திறந்து ”என்ன ஐசே ?” (என்ன) என்றேன். ”இது உமக்குத்தான் தொட்டியில விடுவம் வாரும் ”என்று உள்ளே வந்தான். மீன்களைத்தொட்டியில் விட்டு அவை நீந்தும் அழகை இரசித்து விட்டுச் சென்றான். மதன் அவற்றை அப்போது கந்தர்மடம் சந்தியிலிருந்த அம்பிகை அக்கூறியம் என்ற கடையிலிருந்து வாங்கி வந்திருந்தான்.

Friday, September 30, 2016

சிந்தாமணியிடம் சிக்கிய சின்ன மணி ! - எனது வாசிப்பும் யோசிப்பும்.

புத்தகங்கள்  எப்படி நம்மை வளப்படுத்தும் என்பதை புரிகிற வகையில் சொன்னாலாவது அடுத்த தலைமுறைகள் புரிந்த கொள்ளாதா என்ற ஒரு நப்பாசைதான் இது.


இரண்டாம் வகுப்பில் எனது வாசிப்புப்பழக்கம் ஆரம்பித்தது. அப்போது ஆசிரியப்பணியிலிருந்த எனது தாயாருடன் புத்தளத்தில் வசித்துக்கொண்டிருந்தேன்.  எனது தாயார் ஒரு சிறந்த வாசகி. வீடு முழுவதும் கதைப்புத்தகங்களும் ஆனந்த விகடன் குமுதம்  போன்ற சஞ்சிகைகளும் குவிந்து கிடக்கும்.

அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த சிந்தாமணி எனும் பத்திரிகையில் வரும் சிறுவர் பகுதியை எனக்கு அறிமுகப்படுத்தி எழுத்துக்கூட்டி வாசிக்க வைத்தார் எனது அன்னை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அந்த வித்தியாரம்பம் நடைபெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான். ஏனெனில் அம்மா சற்று ஓய்வாக இருப்பதும் சிறுவர் பகுதி வெளிவரும் ஞாயிறு சிறப்புப் பதிப்பினை சிந்தாமணி வெளியிடுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.

அ்ன்று ஆரம்பித்த வாசிப்பு அப்படியே தீப்பற்றியதுபோல வளரத்தொடங்கியது. அடுத்த ஞாயிறு எப்போது வரும் ,என்று தொடர் கதைகளை படிக்கும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

Friday, September 16, 2016

நெடுங்குளத்து ”சீ” வால் மீன்


மணிவாசகர்    நரிகளைப் பரிகளாக்கிய கதையினை  நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13.

ஏழாம் வகுப்பு படிக்‌கும் போது மீன் வளர்ப்பில் எக்ஸ்பேர்ட் ஆக இருந்தேன் விதம் விதமான மீன்களை வளர்த்து வந்தேன். சில மீன்கள் பெருகும் போது அவற்றை நண்பர்களுடன் பண்டமாற்றுச்செய்து வேறு வகை மீன்களைப் பெறுவேன்.  ஒன்றுக்கும் உதவாத ”கப்பீஸ்” இன மீன்கள்  கேட்பாரின்றி பெருகும். 

அவற்றின் குஞ்சுகளை எனது அழகிய ஸ்பைடர் மீன்களிற்கு அவ்வப்போது உணவாக வழங்கவேண்டியிருக்கும். ரெட்மோறீஸ் ,பிளக் மோறீஸ்,வைட் மோறீஸ் என்ற மீன்களும் எனது வளர்ப்பில் குடும்பம் நடத்தி குஞ்சுகளைப்‌போடும்.

அவற்றில் வால்கள் ஆங்கில ”சீ” எழுத்துப்போல் இருக்கும் மீன்களும் உண்டு . அவை அதிக விலைக்கு விற்கப்படும்.  எனது சக மீன் வளர்க்கும் நண்பர்களிற்கு சீ வால் மீன் என்றால் பைத்தியம்.

 என் உள்ளங்கையளவு தங்க மீன் ஒன்றை என் நண்பன் வைத்திருந்தான். பெரிய மீன்கள் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம். எனவே அவனிடம் பண்டமாற்று  பற்றிப்பேசினேன். அவன் அதற்கு ஈடாக நான்கைந்து சீ வால் பிளக்மோறீஸ் மீன்களாவது வேண்டும். என்றான்.

நான் தருவதாக வாக்குறுதியளித்தேன்.

Sunday, September 11, 2016

அம்மம்மாக் குழாய் அறிவிப்பாளன்- அனுபவச்சிறகுகள் 05

அம்மம்மாக் குழாயும் அறிவிப்பாளனும்.


நான் மூன்றாம் வகுப்பில் செய்த கார்ட்போட் ரோபோ பற்றிய கட்டுரையை சிலர் சாத்தியமற்றது என்று சொல்லாம்.  (என்னுடன் பழகாதவர்கள்)  எனவேதான் இங்கே ஒரு புகைப்பட ஆதாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இது எனது 7 வயதில் எடுக்கப்பட்ட படம். 

வைரவர் கோவில் திருவிழாவில் வாங்கிய   வாங்கிய அம்மம்மாக் குழலை உடைத்து(சிறிய நாதஸ்வரம் போன்றது)அதன் முன் பகுதியில் இருந்த குழாய் ஒலிபெருக்கி போன்ற பகுதியை  தடியில்  வைத்துக்கட்டி பின்னர் சணல் நுால்களை வயர் போல கற்பனை செய்து தொடர்ந்து இணைத்திருக்கிறேன்.

நான் யாருமில்லாத நேரத்தில் இதன் முன்னே நின்று ஏதோ  பேசுகிறேன் ,அதை அவதானித்த எனது தாயார் போல்றோயிட்(உடனடியாகப்படம் கழுவப்பட்டு வரும்)கமெரா மூலம் ஒளிந்திருந்து பிடித்த படம் இது.

மூன்றாம் வகுப்பு விஞ்ஞானி - அனுபவச்சிறகுகள்-04

-பிஞ்சிலே பழுத்தது-


மூன்றாம்    வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் அப்போது தான் தொலைக்காட்சியில் நைட் றைடர் , மற்றும் பல விண்வெளி சம்பந்தமான படங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றால் கவரப்பட்டு நான் உருவாக்கிய ரோபோ என் வயது நண்பர்களிற்கு கிலியை கொடுத்தது.

கிட்டத்தட்ட இப்படித்தான்


கார்ட்போர்ட் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட பொம்மை அது. (அந்தக்கால திரைப்பட ரோபோர்ட்களின் தலை பெட்டிபோல சதுரமாக இருக்கும்) ‌ கைகள் இருக்க வேண்டிய இடத்தில் எனது இலத்திரனியல் பார்ட்ஸ் சேகரிப்பு பெட்டியில் இருந்து எடுத்த மோர்ட்டார்கள் உள்பக்கமாக குத்தப்பட்டு பொருத்தப்பட்டு , கார்ட்போர்ட்டில் தட்டையாக வெட்டி செய்யப்பட்ட   கைகளை அந்த  மோர்ட்டார்  நுனியில்  பொருத்தியிருப்பேன்.

மின் இணைப்புக்கள் எல்லாம்  ஒழுங்கின்றி ரோபோர்ட்டின் முதுகின் வலப்புறம் உள்ள துளை வழியாக வெளியில் வரும். எங்கள் வீட்டின் பின்புற ஹாலில் ஒரு ஐன்னலிற்கு அருகில் இதை நிறுத்தியிருந்தேன். எனவே அந்த ஐன்னலிற்கு வெளியே  (வீட்டின் வெளிப்புறமாக நின்று கொண்டு)இதை இயக்க முடியும்.

Friday, June 17, 2016

வேர்ச்சுவல் வீரர்கள் ! - ( பேஸ் புக்கும் நம்ம இளைஞர்களும் )



மூஞ்சிக்கு நேராக
முடியாததால்
முகப்புத்தகத்தில் மட்டும்  ”கெத்துக்” காட்டும்
இன்றைய இளைஞர்கள்.


இருட்டு நிறத்தில் உள்ளவனும்
எடிட்டிங் புண்ணியத்தில்
காலைச்சூரியனும்
நாணும்படி
சிவந்து ‌ போகிறான்.

குண்டானவன் மெலிந்தும்
எட்டு நிமிடத்தில் எயிட் பக்ஸ் எடுத்தும்
எத்தனை க‌ோலத்தில் ஏமாற்றுகிறான்.

கற்பனையிற் கயிறு திரிக்கும்
இவர்கள்
எத்தனை லைக்ஸ் எடுக்கிறோம்
என்பதில்தான்
வாழ்வின் வெற்றி இருப்பதாய்
பாவம்..
ஏமாந்து போகிறார்கள்.

கோவில் வாசல்களில்
கையேந்தும் பிச்சைக்காரர் எண்ணிக்கையை
லைக் போடு மச்சான் என்றும் செயார்
 பண்ணு மச்சான் என்றும்
கெஞ்சும்
”பேஸ் புக் பெக்கேர்ஸ் ”
எண்ணிக்கை ஓவர்ரேக் செய்துவிட்டது

பேஸ் புக்கின் ”சுட்ட” ஸ்ரேற்றஸ்களை வைத்து
சுதந்திரப்போர் வீரர்களாகவும்
வைரமுத்துவின் வாரிசுகளாகவும்
தம்மை பில்டப்
செய்துகொள்கிறார்கள்.

Thursday, February 4, 2016

மாதவனின் இறுதிச்சுற்று - பாமரனின் விமர்சனம்.



இறுதிச்சுற்றுத் திரைப்படம் - எதேச்சையாகத்தான் பார்க்க நேர்ந்தது. இப்படி எழுத வேண்டும் என்று துாண்டி விட்டது அதன் வீச்சு.

இப்படம் அழகியல் தேவைப்படுவோர்க்கானது.

ஒரு மீனவப்பெண்ணின்  இயற்கையான திறனை எதேச்சையாகக்க காணும் பொக்சிங் கோச் மாதவன் அவளை  உருவாக்கப்படும் பாடுகளும் - வித்தை தெரிந்த குரு திறமையான சிஸ்யப்பிள்ளையை தேடும் அந்த வேதனையும்- பாடுபட்டு அடையும் வெற்றியின் சுவையும்தான் கதை.

ஒரு வழிகாட்டியாக இருப்பவர் அவர் வழிகாட்டும் துறையில் மேம்பட்டவராக இருக்கலாம் அதற்காக அவர் தனிப்பட்ட வாழ்வில்  சாதாரண மனிதனாகவும்  சில சமயங்களில் சமூகம் எதிர்பார்க்கும்  நெறிகளில் தவறியவனாகவும் இருக்கலாம் என்ற யதார்த்தத்தை மூஞ்சியில் அடித்துச்சொல்லும் யாதார்த்தமான பாத்திரப்படைப்பு மாதவனுடையது.

உலகத்தலைவர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வ‌ரை அவர்களது தனிப்பட்ட வாழ்வை குறிவைத்து குதறி மகிழ்பவர்களுக்கு இது படிப்பினை. உண்மையில் வாழ்வை ஓரளவு அறிந்து பல்வகை மனிதர்களுடனும் பழகி வெளி உலகை உணர்ந்து உள்ளவர்களிற்குத்தான் இந்தப்படம் நன்கு புரியும்.

கதாநாயகி அப்படி ஒன்றும் பெரிய அழகியல்ல. மிகச்சாதாரணம். ஆனால்  உண்மையில் தேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை அவரது அக்காவாக வருபவரும் குத்துச்சண்டைப் பயிற்சி பெற்றவரே. எனவே கதை உயிருடன் உலா வருகிறது.

மீனவப்பெண்ணாக ,ஒரு சேரிப்பகுதியில் வாழும் கதா நாயகியும் அவரது மரியாதையற்ற மற்றும் துாசண வார்த்தைப்பிரயோகங்களும் உடல் மொழியும் ஆனால் சுத்தமான உள்ளமும் மிக மிக யதார்த்தம் . இதை அப்பகுதி மக்களை படங்களில் மட்டும் பார்க்காது இறங்கிப்பழகுபவர்களுக்கே  நன்றாகப்புரிய முடியும்.

விரசமான காட்சிகள் இல்லை. அதீத காதல் கெஞ்சல்கள் கதறல்கள் இல்லை. போட்டி , வெற்றி ,இலக்கு என்று உயர்ந்த இலட்சியத்தை நோக்கி வேகமாக ஓடும் கதையில் அப்படியே மின்னல் போல கலந்தும் கலக்காதும் வந்துபோகும் காதல்.

Wednesday, January 13, 2016

சாம்பற் குருவியின் வரிமறந்த பாடல்



எனக்கு இருந்தது ஒரு காடு..
முட்களையும் இலைகளையும் முடிந்து..எப்ப‌டியோ..
எனக்கு பிடித்தபடி  அமைத்தேன் கூட்டை.

வரிமறந்த பழைய பாடலை அடிக்கடி
அபஸ்வரத்தில் பாடுவேன்.
நான் மட்டுமே கேட்க.

காலை வி‌டியக் கூவும் கடமை எனக்கில்லை.
எழும்புவேன் எப்பொழுதாயினும்.
சுள்ளெனச்சூரியச்சட்டியின் எண்ணைத்துளி சிந்தியாயினும்.
தினசரி
ஒரு பொழுதில் எழுவேன்.

Tuesday, April 21, 2015

கனவைத் துரத்தும் நாய்கள்.



கனவிலும்
நனவிலும்
எ்னைச் சுற்றி ஊளையிட்டுத்திரியும்
ஒரு கூட்டம் நாய்கள்.

நான் ஒன்றும் மணிவாசகர் இல்லைத்தான்
எனினும..
எனைச்சுற்றி நடப்பது என்னவோ
நரிகளைப் பரிகளாக்கிய கதைதான்.

 இந்த
உயிரின் ஆழம் வரை  செல்லும் ஊளை.
நாய்களுக்குரியதல்ல.
இது நடுக்காட்டில் எங்கோ
பிணம் தின்று கொழுத்த பேய்கள் மொழி.

பேய்களைப்பிடித்து நாய்களாக்கியது யார்.


என் மனசில் இப்போதெல்லாம்  துழாவும் ஒற்றைக் கேள்வி இதுதான்.

பல வேளைகளில்..
நாய்க்கும் நரிக்கும் பிறந்த கலப்பு இனம்போலும் தெரியும்.
அவை ஒன்று, இரண்டல்ல, எண்ணிற் பல.

ஒன்று , எனது  வேகமான நடைகளின் போது காலை இடறி ஓடும்.
இன்னொன்று ,
நடக்கும்  போது கூடவே வரும்.
குறிப்பறிவது போல்   கொள்ளிக் கண்களை  விரித்து
என்மனதை வேவு பார்க்கும்.

 சில வேளை இரண்டு இணைந்து நான் உட்காரும் முன்னே என் ஆசனங்களில் சிறுநீர் கழிக்கும்.

அவற்றில் ஒன்று உடலால் உராய்ந்து என் சுற்றுப்புறங்களை
 சுத்தம் செய்வதாய் பாவ்லா  காட்டுவதும் உண்டு. 

விலகிக் கண்மூடின்
என்
கனவுகளில்
எப்போதும் வரும் அதே ஒற்றைப் பனைக் காட்டில்
ஓலமிட்டு
நான் ஓட
பின்னால்
இவற்றில் சில.

என் நன்மைக்காக இந்த சாத்தான்களை
இங்கே அனுப்பியதாய்
அசரீரி கேட்டது ஒரு நாள்.

நான் நம்பவில்லை
தேவ வசனங்களை எந்த சாத்தான்
எப்படித்தான் ஓதினாலும்
அது
திறக்கப்போவது என்னவோ
நரகத்தின் வாயிலைத்தான்.

அழையாமல் வந்த
இநத அசிங்கப் பிறவிகள்
அடிக்கடி  கடித்ததில்
கிழிந்து தொங்குகிறது

அழுக்குத்துணியாக
என்
தனிமனித வாழ்வு.


Wednesday, February 4, 2015

பிறத்திகளிற்கு என்ன கவலை !




உயிர்போனாலும்
தம்பார்வையில் தம்பிக்கு இதுதான் நல்லது
என்று
வெம்பியவன் மனக்கடலின் துளியளவின்
துளி 
கரிக்குமா ,இனிக்குமா
எனத்தெரியாமலே
சிலாகிக்கும்
ஒரு கூட்டம்.

பக்குவம் செய்வதாய்
சொல்லி
சட்டியில் கிளறி
அடுப்பில் போட்டகதை


எந்த உறவும் இடை
வெளிகளிற்குட்பட்டதே.
 தெரியாமல்
தனிமனித வாழ்வில்
தடியோடு புகுந்தது பிறத்தி.

அடித்த அடியில்
விழுந்த பிணங்கள் மூன்று
நான்கு.

அரைவேக்காடுகளின் அவசரத்திட்டம்
முள்ளில் விழுந்த சீலையை
மூர்க்கமாய்
இளுத்த அணி.

சிகிச்சை வெற்றி
சீக்காளி போய்ச்சேர்ந்தான்.

இந்த பரிசோதனை
முடிவுகளில்
வெற்றியில்லாதது
வேதனையில்லை.

அடுத்த(வன்) சோதனையில் அவை திருத்தப்படும்.

பிறத்திகளிற்கு என்ன கவலை
வீழ்ந்த
பிணங்களைப்பற்றி.

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை